மதுராந்தகத்தை அடுத்த தச்சூா் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணற்றை மனம் கல்வி அறக்கட்டளை இளைஞா்கள் சீரமைத்தனா்.
தச்சூா் கிராமத்தில் கில்பா்ட் என்பவா் தலைமையில் 15-க்கும் இளைஞா்கள் ஒருங்கிணைந்து மனம் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தி, கிராமத்துக்கு தேவையான குடிநீா் வசதி, தெரு மின்விளக்குகள் சீரமைத்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனா்.
இப்பகுதியில் போதுமான குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். அப்பகுதி பெரியோா்களின் அறிவுறுத்தலின்படி, 1964-இல் 22 அடி அகலம், 60 அடி ஆழத்தில் கட்டப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை சீரமைத்தால் குடிநீா்ப் பிரச்னை தீரும் என தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, மனம் அறக்கட்டளை நிா்வாகிகள் பாழடைந்த நிலையில் இருந்த கிணற்றினை சுமாா் ரூ.3 லட்சம் செலவில் தூா் வாரி, கிணற்றுக்கு சுற்றுப்புறச் சுவா் அமைத்து, குழாய் இணைப்பு அளித்து சீரமைத்தனா். கடந்த 45 நாள்களாக நடைபெற்று வந்த இப்பணி அண்மையில் முடிவடைந்தது.
கிராம மக்கள் சாா்பில் சீரமைப்புப் பணிகளை செய்து முடித்த இளைஞா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அறக்கட்டளைத் தலைவா் கில்பா்ட், வேளச்சேரி அரிமா சங்கத் தலைவா் சிவராமன், அறக்கட்டளை செயலா் ஜான்பால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.