செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தை சேர்த்தவர் அருண் (23). இவர் சுங்குவார்சத்திரம் ஜோதிநகர் பகுதியில் தங்கி, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் தங்கியிருந்த வீட்டில் அவருடன் 5 தொழிலாளர்களும் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை இரவு 3-ஆவது மாடிக்கு சென்று மது அருந்தியதாகத் தெரிகிறது. பின்னர், தனது செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்த அருண் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அருணை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மற்றொருவர் பலி
மதுபோதையில் வீட்டின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்த இளைஞர் தவறி விழுந்து பலியானார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி மகன் யுவன்ஸ் (25). இவர் மொளச்சூர் பகுதியில் தங்கி, சுங்குவார்சத்திரம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். யுவன்ஸ் கடந்த மூன்று நாள்களாக பணிக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு சுற்றி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இவர் வியாழக்கிழமை இரவு மதுபோதையில், வீட்டின் சுற்றுச்சுவரின் மீதிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இரு மரணங்கள் குறித்தும் சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.