கிராமப்புற எளியோர்களின் வருவாய்ப் பெருக்குத் திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 53 பயனாளிகளுக்கு ஹுண்டாய் நிறுவனம் சார்பாக விலையில்லா கறவை மாடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கிராமப் புற ஏழை எளியோர்களின் வருவாய்ப் பெருக்குத்திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 53 பயனாளிகளுக்கு ரூ.35.76 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹேண்ட்-இன்-ஹேண்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கான முதற் கட்ட பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஹுண்டாய் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.வேல்முருகன் தொடங்கிவைத்தார்.
இதில் ஹேண்ட்-இன்-ஹேண்ட் தொண்டு நிறுவனத் துணைப் பொது மேலாளர் சந்திரகுப்தா, திட்ட மேலாளர் சொக்கநாதன் ஆகியோர் பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி, கால்நடை வளர்ப்பு, தீவனம் வழங்க வேண்டிய முறைகள், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளித்தனர்.