காஞ்சிபுரம் அருகே போலி மருத்துவர் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் வசிப்பவர் அ.கஜபதி(55). இவர் பி.எஸ்.சி., படித்துவிட்டு அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து, பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ப.முத்து, கஜபதியின் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு ஊசி மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில்கள், அலோபதி மருந்துகள் இருப்பதும், அவர் மருத்துவம் படிக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல் துறையினரிடம் ப.முத்து அளித்த தகவலின் பேரில் போலீஸார் கஜபதியை கைது செய்தனர்.