உத்தரமேரூா் தாலுகாவுக்கு உட்பட்ட தீட்டாளம் கிராமத்தில் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தீட்டாளம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் வசிக்கும் பலரும் விவசாயத் தொழிலையே நம்பியுள்ளனா்.
இக்கிராமத்திலிருந்து பாப்பநல்லூா், பம்பயம்பட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமாகி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்னை இருந்து வருகிறது. சாலை சரியில்லாததால் மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இச்சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி கிராமத்தினா் தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த பலனும் இல்லாததால் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.