கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இரு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் அவசரநிலை ஒத்திகை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா முகாமைத் தொடக்கி வைத்தார்.
கல்பாக்கம் அணுசக்தி துறை பலபிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையப் பிரிவுகள் போன்றவை இதில் அடக்கம். அணுசக்தி விதிமுறைகளின்படி இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அவசரநிலை ஒத்திகையை முன்னிட்டு மாவட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் பயிற்சி முகாம்களை இம்மையம் நடத்தி வருகிறது.
வரும் 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் அவசர நிலை ஒத்திகை நிகழ்வையொட்டி, அதற்கான பயிற்சி முகாமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, அவசரநிலை ஒத்திகையின் முக்கியத்துவம் மற்றும் மக்கள் பாதுகாப்பில் அதன் பங்கு, அதிகாரிகளின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினார்.
சென்னை அணுமின் நிலைய இயக்குநர் எம்.ஸ்ரீநிவாஸ் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் சரவணன், கல்பாக்கம் அணுசக்தி மைய அவசரநிலைச் செயலர் ரவிசங்கர், முதன்மை கண்காணிப்பு மேலாளர் டாக்டர் கே. ராய் செங்கல்பட்டு கோட்டாட்சியர் என்.செல்வம், வட்டாட்சியர்கள் சங்கர் (செங்கல்பட்டு), தங்கராஜ் (திருக்கழுகுன்றம்), ராஜேந்திரன் (திருப்போரூர்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சி முகாமில் 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறவுள்ளனர்.