பெற்றோர்கள் குழந்தைகளின் திறமைகளை நம்புங்கள் என்று காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளர் என்.சேதுராமன் கூறினார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் 26 -ஆவது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீமதி ராமலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரியின் பேராசிரியைகள் மீனாட்சி (வணிகவியல்துறைத் தலைவர்), கலைச்செல்வி (பொருளியல்துறைத் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை நேரக்கல்லூரி வணிகவியல்துறைத் தலைவர் சாந்தி வரவேற்றார். விழாவில் இளங்கலைப் பட்டங்கள் 484 பேருக்கும், முதுகலைப் பட்டங்கள் 102 பேருக்கும் என மொத்தம் 586 பேருக்கு பட்டங்களை வழங்கி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப் பதிவாளர் என்.சேதுராமன் பேசியது:
இன்றைய இளைய சமுதாயம் எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செயல்பட வேண்டும். எதையும் சந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களும் அவரவர்களது குழந்தைகளைப் படிக்க வைப்பது இந்த சமூகத்துக்கு செய்யும் பெரும் சேவையாகும். ஒவ்வொரு பெற்றோரும் அவரவர்களது குழந்தைகளை முழுமையாக நம்புங்கள். பெற்றோர்கள் குழந்தைகள் மீது வைக்கும் நம்பிக்கை தான் நாட்டிற்கு வளர்ச்சியையும் கொடுக்கும் என்பதற்கு அபிநந்தன் போன்றவர்கள் சிறந்த உதாரணம் என்றார். கணிதத்துறை தலைவர் பேராசிரியை ஹேமாவதி நன்றி கூறினார்.