பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைச் சுத்தம் பணிகள் தொடங்கியுள்ளன.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் 3 நாள்கள் தங்குகின்றனர். இதையொட்டி பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் லதா, திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் போலீஸார் பாதுகாப்புடன் அர்ஜுனன்தபசு, வெண்ணை உருண்டைப்பாறை, ஐந்துரதம் கடற்கரைக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை புல்டோசர் மூலம் அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு சார்பில் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசில் உள்ள முனிவர்களின் தவம் செய்யும் சிற்பங்கள், 2 யானைகள் நடக்கும் சிற்பங்கள் மாமல்லபுரம் என்றாலே நினைவுக்கு வரும் புகழ்பெற்ற குரங்கு பேன் பார்க்கும் சிற்பங்கள் உள்ளிட்டவற்றில் படிந்துள்ள உப்புப் படிமங்களை ரசாயனக் கலவை நீரினால் சுத்தம் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பணி முடிந்தவுடன் கடற்கரைக்கோயில், ஐந்துரதம் ஆகிய முக்கிய பாரம்பரிய சின்னங்களில் உள்ள உப்புப் படிமங்களை ரசாயனக்கலவை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் சிதிலமடைந்துள்ள பகுதிகள் உடைக்கப்பட்டு மறுசீரமைப்புப் பணிகளும் நடைபெறவுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.