வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியில் இருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உறவினர்கள் புதன்கிழமை அலுவலகம் உள்ளே போராட்டம் நடத்தினர்.
அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள சுவிட்ச் யார்டில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த ஜீவானந்தம் (24) ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அனல்மின் நிலையத்தில் சுவிட்ச் பகுதியை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு ஜீவானந்தம் விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி ஜீவானந்தத்தின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் வடசென்னை அனல் மின் நிலையத்தின் உள்ளே புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மின் நிலைய தலைமைப் பொறியாளர், ஒப்பந்த நிறுவனத்தினர், மீஞ்சூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயிரிழந்த ஜீவானந்தம் கும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.