காஞ்சிபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்க சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு, சங்கத் தலைவர் தில்லை பாஸ்கர் தலைமை வகித்தார்.
கௌரவத் தலைவர் எஸ்.தர்மலிங்க முதலியார் முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் என்.புருஷோத்தமன் வரவேற்றார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும், சிறப்பாகப் பணியாற்றிய 260 ஆசிரியர்களுக்கும் பேராசிரியை ஜெயந்த ஸ்ரீபாலகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக 550 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.16 லட்சத்து 51 ஆயிரத்து 400-ஐ சங்கத் தலைவர் தில்லை பாஸ்கர் வழங்கினார். பொருளாளர் ஜி.கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவில் சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.