படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ரூ55.85 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி உள்ளது. பருவமழை காலங்களில் ஒரத்தூர் ஏரி நிரம்பும் போது வெளியேறும் உபரிநீர் ஒரத்தூர் மடுவின் வழியாக அடையாற்றில் கலந்து வருகிறது. இதனால் ஒரத்தூர் மடுவானது அடையாற்றின் முக்கிய கிளை நதியாக கருதப்படுகிறது.
இந்த கிளையாற்றின் மூலம், 25.26 ச.கி.மீ பரப்பளவில் கிடைக்கப்பெறும் மழைநீர் 11 ஏரிகளில் சேகரிக்கப்பட்டு மீதமுள்ள உபரிநீர், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளக்காலங்களில் வரதராஜபுரம், தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் அடயாற்றின் கீழ்புறத்தில் உள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு வெள்ள பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அதிகப்படியான மழைநீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
இந்த நிலையில், ஒரத்தூர் கிளையாற்றில், ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூர் கிளையாற்றில் உள்ள தரிசு நிலப்பகுதிகளை இணைத்து சுமார் 760 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ரூ55.85 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கானொலிகாட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
இந்த புதிய நீர்தேக்கத்தில், 750 மில்லியன் கனஅடி வெள்ள நீர் சேகரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த நீர்தேக்கத்தை அம்மணம்பாக்கம், படப்பை ஏரிகளின் மூலம் மணிமங்கலம் ஏரியுடன் உள்படுகை நீர்மாற்று கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மணிமங்கலம் ஏரியில் இருந்து குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அடையாற்று படுகையை ஓட்டியுள்ள புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஒரத்தூர் பகுதியில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணியையும் நீர்தேக்கத்திற்கு கரை அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.