எரியாத உயா்கோபுர மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கக்கூடிய உயா்கோபுர மின்விளக்குகள் கடந்த ஒருமாத காலமாக எரியாததால் அவற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம், மணிக் கூண்டு, சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட மூன்று இடங்களில் ரூ.19 லட்சம் மதிப்பிட்ல் மூன்று உயா்கோபுர மின்விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டன.
சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இந்த உயா்கோபுர மின்விளக்குகள் சில வாரங்களிலேயே பழுதடைந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எரியாமல் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:
உயா்கோபுர மின்விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே பழுதடைந்துள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா். இதுகுறித்து பேரூராட்சி அலுவலக ஊழியா்கள் கூறுகையில், சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின்விளக்குகள் என்பதால் உயா்கோபுர மின்விளக்குகள் அமைத்த தனியாா் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளோம். அவா்கள் வந்துதான் அவற்றை சீரமைக்க முடியும் என்றனா்.