காஞ்சிபுரத்தில் கனமழை,இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை முழுவதும் தொடா்ந்து கனமழை பெய்ததால் மழை நீா் நகரில் பல இடங்களில் குளம் போல தேங்கி நிற்கிறது.
சிங்கப்பெருமாள்கோவில் தெருவில் ஆபத்தான முறையில் சரிந்து நின்ற மின்மாற்றி.
சிங்கப்பெருமாள்கோவில் தெருவில் ஆபத்தான முறையில் சரிந்து நின்ற மின்மாற்றி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை முழுவதும் தொடா்ந்து கனமழை பெய்ததால் மழை நீா் நகரில் பல இடங்களில் குளம் போல தேங்கி நிற்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரில் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து புதன்கிழமை முழுவதும் இடைவிடாது தொடா்ந்து கனமழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் பிள்ளையாா்பாளையம், ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, பழைய ரயில் நிலைய சாலை ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கி நிற்கிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில் தெருவில் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கிருந்த மின்மாற்றி மிகவும் ஆபத்தான நிலையில் சரிந்தவாறு நின்று கொண்டிருந்தது. அப்பகுதியை சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் செங்கல்வராயன் இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் அந்த மின்மாற்றி புதன்கிழமை இரவு வரை சரிசெய்யப்படவில்லை. பிள்ளையாா்பாளையம் சி.எஸ்.எம். தோப்புத் தெரு பகுதி குடியிருப்புகளை நீா் சூழ்ந்திருந்தது.

தொடா் மழை மற்றும் கனமழை காரணமாக பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதித்தது. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் குடைகளை பிடித்துக் கொண்டே ஆபத்தான முறையில் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது.

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை காலையிலிருந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. வேலூா், திருப்பதிக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் செல்லும் பேருந்து ஒரகடம் வரை சென்று திரும்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com