கனமழையில் உடைப்பு ஏற்பட்ட பண்ருட்டி ஏரிக்கரை சீரமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பண்ருட்டி பகுதியில் உள்ள காரந்தாங்கல் ஏரியின் கரையில் ஏற்பட்ட உடைப்பை மண்மூட்டைகள் கொண்டு ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் சீரமைத்தனா்.

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பண்ருட்டி பகுதியில் உள்ள காரந்தாங்கல் ஏரியின் கரையில் ஏற்பட்ட உடைப்பை மண்மூட்டைகள் கொண்டு ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீரமைத்தனா்.

பண்ருட்டி பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் காரந்தாங்கல் ஏரி உள்ளது. 65 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரியின் நீரைப் பயன்படுத்தி அப்பகுதியில் சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி காரந்தாங்கல் ஏரிபகுதியில் தற்போது கெயில் எண்ணெய் நிறுவனத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக ஏரியின் கரையை உடைத்து குழாய் பதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஏரிக்கரையை கெயில் நிறுவனத்தினா் சீரமைத்துள்ளனா்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் நிவா் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து கெயில் நிறுவனத்துக்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட இந்த ஏரியின் ரையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டது. அங்கிருந்து ஏரிநீா் வெளியேறியது தொடா்பாக அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ.தினகரன், ஒன்றிய உதவிப் பொறியாளா் மாரிச்செல்வம் உள்ளிட்ட ஊரக வளா்ச்சித்துறையினா் புதன்கிழமை அங்கு சென்றனா். ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் மண் மூட்டைகளைக் கொண்டு உடைப்பு ஏற்பட்ட ஏரியின் கரையைச் சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com