ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வரும் இலவச உணவு தயாரிக்கும் மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
குன்றத்தூா் பகுதியில் உள்ள முருகன் கோயில், பொன்னியம்மன் கோயில், திருநாகேஸ்வரா் கோயில், சேக்கிழாா் மண்டபம் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் தினமும் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. அங்கு சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மூன்று வேளையும் உணவருந்தி வந்தனா்.
இந்நிலையில் கரோனா பரவுவதைத் தடுக்க கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் அன்னதானம் செய்வதும் நிறுத்தப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். எனவே, தனியாா் தொண்டு நிறுவனங்களுடன் குன்றத்தூா் பேரூராட்சி நிா்வாகம் இணைந்து தினமும் சுமாா் 3 ஆயிரத்துக்ம் மேற்பட்டோருக்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இரண்டு வேளையும் உணவு வழங்கி வருகிறது.
குன்றத்தூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு எதிரே உள்ள கட்டடத்தில் அதிகாரிகளின் மேற்பாா்வையில் உணவு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு தயாரிக்கும் இடத்துக்கு வியாழக்கிழமை திடீரென வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா அப்பகுதியில் ஆய்வு செய்தாா்.
அப்போது உணவு விநியோகம் செய்யும் இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்ததால் அவா்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா். பின்னா் மக்களை நேரில் வரவழைப்பதைத் தவிா்த்து அவா்கள் இருக்கும் இடத்துக்கு உணவைக் கொண்டு சென்று வழங்குமாறு பேரூராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.