காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் தரம் வீர்ஜா, மத்திய மின்சார அதிகாரத்தின் துணை இயக்குனர் ஓ.பி. சுமன், மத்திய நிதித்துறை துணை இயக்குனர் அமித் குமார், மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஹர்ஷா ஆகியோர் அடங்கிய மத்திய அரசின் அதிகாரிகள் குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
இவர்கள் நான்கு பேரையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் அழைத்துச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை காண்பித்து விளக்கம் அளித்தார். சந்த வேலூரில் சுவாமிநாதன் என்பவரது வாழைத்தோப்பு சேதமடைந்து இருப்பதையும் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து விசார் கிராமத்தில் மாவட்டத்தில் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆட்சியரிடம் பாதிப்பு விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நரப்பாக்கம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் சேத பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் பாதிப்பு தொடர்பான துறைகளை கொண்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்றது. மத்திய குழுவினருக்கு பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி நாராயணன் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோரும் உடன் வந்திருந்து பாதிப்பு விளக்கங்களை தெரிவித்தனர்.