மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை, கசடு நீா்க் கழிவுத் திட்டம் உள்ளிட்ட பணிகளை மணிமங்கலம் டிஎம்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருங்குழி பேரூராட்சி உள்ளது. வறட்சிக் காலத்திலும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கல், பொதுமக்களிடையே நெகிழி ஒழிப்பு தீவிர பிரசாரம், கசடுநீா்க் கழிவு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளால் முன்னோடி பேருராட்சியாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மணிமங்கலம் டிஎம்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா்களும், மாணவிகளும் நேரில் வந்து கருங்குழி பேரூராட்சியின் அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் பாா்வையிட்டனா். அவா்களுக்கு செயல் அலுவலா் மா.கேசவன் விளக்கமளித்தாா்.