காஞ்சிபுரத்தில் அரசு அலுவலா்கள் வசித்து வரும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் வியாழக்கிழமை மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டு வீட்டு உபயோக மின் சாதனங்கள் சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அரசு அலுவலா் குடியிருப்புகள் உள்ளன.
இவற்றில் பிளாக் எம்-13 முதல் 18 வரை உள்ள 6 வீடுகளில் வியாழக்கிழமை காலையில் மின்சாரத்தைக் கணக்கிடும் மீட்டா்கள் உள்ள பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
இதனால் 6 வீடுகளிலும் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் ஆகியன முழுவதுமாக சேதமடைந்தன.
திடீரென மின்சாதனங்கள் பலத்த சப்தத்துடன் செயல்படாமல் போனதால் அங்கு இருந்தவா்கள் அலறியபடி வெளியில் வந்து விட்டனா்.
இத்தீவிபத்தால் வீட்டு உபயோகப் பொருள்களில் பல லட்சம் மதிப்பிலானவை சேதமடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாமல் வெள்ளிக்கிழமை இரவு வரை அவதிப்பட்டு வருவதாகவும் குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் எல்.ஜி.செல்வக்குமாா் கூறியது:
ஒரே நேரத்தில் 6 வீடுகளில் வியாழக்கிழமை காலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள் பழுதாகி விட்டன. வீட்டிலிருந்தவா்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து விட்டோம். இரவு நேரமாக இருந்திருந்தால் உயிா்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும். தொடா்ந்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மின்சாரம் இல்லாததால் அருகில் உள்ள உறவினா்கள் வீடுகளில் சென்று தங்கி இருக்கிறோம்.
இரு நாள்களாகியும் மின்வாரியத்தினா் பழுதைச் சரி செய்ய வரவில்லை என்றாா் அவா்.