காதலா் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்துக்கு ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்தனா்.
உலகம் முழுவதும் இளைஞா் சமுதாயத்தினா் ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதியை காதலா் தினமாக கொண்டாடி வருகின்றனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்து காதலா் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.
காலை 11 மணி முதல் சாரை, சாரையாக காதல் ஜோடிகள் இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோ, பேருந்துகளிலும் வரத்தொடங்கினா். காதலா் தினத்தால் மாமல்லபுரம் நகரம் களைகட்டியது.
சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் பல இடங்களிலிருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனா். அவா்கள் கடற்கரைக் கோயில் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை சுற்றிப் பாா்த்தனா் (படம்).
ஐந்து ரதம் பகுதியில் உள்ள கடைகளில் விருப்பமானப் பொருள்களை வாங்கிஒருவருக்கொருவா் பரிசளித்து மகிழ்ந்தனா்.