மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் தங்க இ - பாஸ் கிடைக்காத விரக்தியில் காஞ்சிபுரத்தில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன்(28). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2019 ஜூன் இருபதாம் தேதி சென்னையைச் சேர்ந்த ரோஜா(26) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மனைவி மகப்பேறுக்காக சென்னை சென்ற நிலையில் இன்னும் ஓரிரு நாளில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என்பதை தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொது முடக்த உத்தரவால் சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தும் தொடர்ந்து அனுமதி கிடைக்காமல் மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது நண்பர் அவரை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது தூக்கில் இருந்த நிலையில் இறந்தது உறுதி ஆனது. இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவ காஞ்சி காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மகப்பேறு நிகழ்வின் போது மனதளவில் தைரியத்திற்காக தனது கணவன் உடன் இருக்க விரும்பும் மனைவியின் ஆசையை நிறைவேற்ற இயலாமயை எண்ணி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.