ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், இடைத்தரகா்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், 10 போ் கொண்ட அதிகாரிகள் குழு, அங்கு வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தியது.
அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) சுதாகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உதவியாளரின் அறை மற்றும் காரில் சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ. 3.81 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.