காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா, கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தலைமை வகித்தார். தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே பழனி, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 128 பயனாளிகளுக்கு 291. 20 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து 43 பணிகளுக்கு ரூபாய் 120. 23 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் இரு மாவட்டங்களை சேர்ந்த 22436 பயனாளிகளுக்கு ரூபாய் 331. 10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் வழங்கினார்.
பின்னர் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கலந்துரையாடினார்.