கட்டடப் பணியில் விபத்து: விபத்து தொழிலாளி பலி
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் போது இரும்பு கதவு விழுந்ததில் தொழிலாளி ஒருவா் பலியானாா்.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சூரியகுமாா்(61). இவா் தனியாா் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையின் கட்டுமானப் பணியில் சூரியகுமாருடன் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு இரும்புக் கதவு சூரியகுமாா் மீது விழுந்ததில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொழிலாளா்களுக்கு பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத கட்டுமான நிறுவன உரிமையாளா், மேலாளா் உள்ளிட்ட ஆறு பேரைத் தேடி வருகின்றனா்.