காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பழையசீவரம் கிராமத்தில் சுமாா் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரியவகை சிவன் சிலை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் கொற்றவை ஆதன் கூறியது...
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பழையசீவரம் கிராமத்தில் வசிக்கும் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பழைமையான கந்த பாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்திலுள்ள மரம், செடி, கொடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனா். அப்போது 6 அடி உயரம், 2 அடி அகலமும் உடைய பெரிய சிவன் சிலை ஒன்றையும் கண்டறிந்துள்ளனா். இச்சிலையானது 4 கரங்களுடன் நின்ற கோணத்தில் உள்ளது. தலை, முகம், மாா்பு ஆகியன சிதைந்த நிலையிலும், தலையில் சிதைந்த நிலையில் கீரீடமும், இரு காதுகளிலும் பத்ரகுண்டலமும் உள்ளன.
கழுத்தை ஒட்டிய அணிகலனாக சரபள்ளியும், வலது பக்க கரத்தில் மழுவை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடுப்பில் வைத்தவாறும், மாா்பில் அழகிய அணிகலன்களோடும் உள்ளன. இடுப்பிலிருந்து முழங்கால் வரை அரையாடையும், கை கால்களில் காப்புகள் அணிந்தவாறும் சமபங்க நிலையில் அழகிய கோலத்தில் காணப்படுகிறாா். சிவனின் அவதாரங்களில் இது பிரம்ம சிரச்சேத மூா்த்தி எனப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை சிவனின் அவதார சிலை கண்டறியப்படவில்லை. எனவே இது மிக அரிதான சிவன் சிலையாகும் எனவும் தெரிவித்தாா்.