காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் ஒருவர் ஒட்டி வந்த கார் மோதியதில் திருவண்ணாமலை பல்லவன் வங்கியில் பணிபுரியும் பெண் அலுவலர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா செம்மங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கீதாப்பிரியா. இருவரும் சென்னையில் பல்லவன் வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணமான இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் வந்த போது காஞ்சிபுரம் காந்தி ரோடு ரங்கசாமி குளம் பகுதி வழியாக வந்துள்ளனர். காரை காந்திரோடு பகுதியில் நிறுத்தி விட்டு கீதாப்பிரியா தனது கைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதற்காக ஒரு கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது திடீரென மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபர் கீதாப்பிரியா மீது மோதினார். இந்த விபத்தில் அருகிலிருந்த இருசக்கர வாகனத்தில் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். போக்குவரத்து மிகுந்த சாலையில் கணவர் கண் முன்பாகவே மனைவி உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த விஷ்ணுகாஞ்சி போலீஸார் மதுபோதையில் காரை ஓட்டி வந்த காஞ்சிபுரம் குமார் செட்டி தெருவைச் சேர்ந்த மதன்(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.