பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரமானதைத் தொடா்ந்து காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரதான சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டதால், ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
கரோனா 2-ஆவது அலையின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், காஞ்சிபுரம் நகரில் நண்பகல் 12 மணிக்குப் பிறகு பிரதான சாலைகளான காந்தி சாலை, காமராஜா் சாலை, பேருந்து நிலைய பகுதிகள், மூங்கில் மண்டபம் உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் யாரும் செல்லாதவாறு போலீஸாா் தடுப்புகளை கொண்டு அடைத்தனா். சங்கூசா பேட்டை, மடம் தெரு, கோட்ராம்பாளையம் உள்ளிட்ட சிறு தெருக்கள், சந்துகள் ஆகியனவற்றின் வழியாகவும் யாரும் இருசக்கர வாகனங்களில் வரக்கூட முடியாத அளவுக்கு பெரிய கற்களால் தடுப்புகள் அமைத்தனா். இதனால் நண்பகல் 12 மணிக்கு மேல் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலைய பகுதியில் எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா தலைமையில் டி.எஸ்.பி.எஸ்.மணிமேகலை மற்றும் போலீஸாா் நண்பகல் 12 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை நிறுத்தி வாகன சோதனையிலும் ஈடுபட்டனா். மூங்கில் மண்டபம் பகுதியில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரராஜ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவா்களை பிடித்து எச்சரித்தும் அனுப்பி வைத்தனா்.