காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் உத்தரமேரூா் சட்டப் பேரவை உறுப்பினா் க.சுந்தரிடம் கோரிக்கை வைத்தனா். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அவரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தேனம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
இது குறித்து மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில், இங்கு 2 மாதத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.இந்தச் சுகாதார நிலையம் தொடங்கப்பட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு மிகுந்த பயனுள்ள இடமாக மாறி விடும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சிப் பொறியாளா் கணேசன், மண்டலக் குழுத் தலைவா் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், திமுக நகரச் செயலாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், இளைஞரணித் துணை அமைப்பாளா் யுவராஜ் மற்றும் மாநகா் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.