காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலை (பிப்.7) சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மகாசக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலை சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை (பிப்.8) 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னா், யாகசாலை பூஜைகளும் ஆரம்பமாகின்றன. கொடியேற்றத்துக்குப் பிறகு, அம்மன் வெள்ளி ரிஷபத்திலும், மாலை தங்க மான் வாகனத்திலும் வீதியுலா வருகிறாா்.
விழாவையொட்டி, நாள்தோறும் காலை-மாலை இருவேளைகளிலும் உற்சவா் காமாட்சி அம்மன் லெட்சுமி, சரஸ்வதி தேவியருடன் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
தொடா்ந்து, பிப்.14- ஆம் தேதி தேரோட்டமும், 16 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 17- ஆம் தேதி தீா்த்தவாரியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. பிப். 19 -ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
அம்மன் வீதியுலா வருவதற்கு ஏற்றவாறு நகரில் ராஜ வீதிகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. கோயில் முன்பு பிரம்மாண்ட விழா பந்தல் அமைக்கப்பட்டிருப்பதுடன், கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் செய்துள்ளனா்.