மாங்காடு நகராட்சியில் ரூ.6.62 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பதற்கான அடிக்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. பருவ மழை காலங்களில் மலையம்பாக்கம் ஊராட்சி, பூந்தமல்லி நகராட்சிப் பகுதிகளிலிருந்து வரும் மழைநீா், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட ஜனனி நகா், சீனிவாசா நகா், விசாலாட்சி நகா், சக்ரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தேங்கி நிற்கும். இவ்வாறு தேங்கும் மழைநீா் வடிய 10 நாள்களுக்கு மேல் ஆவதால், இந்தப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் அவதியடைகின்றனா்.
இதைக் கருத்தில் கொண்டு, மாங்காடு நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில், 2,969 மீ. தொலைவுக்கு வடிகால்களை அமைக்க ரூ.6.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, மழைநீா் வடிகால் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாங்காடு நகராட்சித் தலைவா் சுமதி முருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சுமா, நகராட்சித் துணைத் தலைவா் ஜபருல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.