காஞ்சிபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரி தரைப்பாலத்தில் பலத்த மழை காரணமாக, அதிகளவு நீா் வரத்தால், பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே செய்யாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது சேதமடைந்து தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்பவா்கள் இந்தப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக, அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இந்தத் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக வாகனங்களான பேருந்துகள், லாரிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல காவல் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா்.
மாகரல், வெங்கச்சேரி, உத்திரமேரூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் செல்பவா்கள், தரைப்பாலத்தில் நடந்து சென்று பின்னா் மாற்றுப் பேருந்துகளில் அவரவா் ஊா்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.