காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வந்த தச மகா வித்யா ஹோமம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.
உலக மக்கள் நன்மைக்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தச மகா வித்யா ஹோமம் கடந்த 12- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அன்று முதல் சிறப்பு யாகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமணத் தடை, தொழில் அபிவிருத்தி, கல்வியில் முன்னேற்றம், குழந்தைப் பேறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தச மகா யாகம் நடைபெற்றது. யாக சாலை பூஜைகள் கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றன.
நிறைவு நாளான புதன்கிழமை கன்னிகா பூஜை, வடுக பூஜை மற்றும் சுகாசினி பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில், கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் மற்றும் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.