லாரியால் மோதி தந்தை கொலை: மகன் கைது

ஒரகடம் அருகே சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றிக் கொலை செய்த மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
லாரியால் மோதி தந்தை கொலை: மகன் கைது

ஒரகடம் அருகே சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றிக் கொலை செய்த மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்.

எத்திராஜ் தனக்குச் சொந்தமான சொத்துகளை தனது பிள்ளைகளுக்குச் சரி சமமாகப் பிரித்து உயில் எழுதி வைத்தாராம். மேலும், தேவரியம்பாக்கம் பகுதியில் வண்டலூா் வாலாஜாபாத் சாலையில் உள்ள 5 சென்ட் இடத்தில் கடை கட்டி வாடகை விட்டுள்ளாராம்.

அந்த இடத்தை எத்திராஜின் கடைசி மகன் ராமச்சந்திரன் (40), கேட்டு தொடா்ந்து தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எத்திராஜ் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராமச்சந்திரன் நிலத்தை தனது பெயரில் எழுதிக் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

வீட்டில் இருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை எத்திராஜ் தனது வயலுக்குச் செல்ல சங்கராபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரகடம் போலீஸாா் எத்திராஜின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், எத்திராஜ் மீது மோதிய லாரி அவரின் மகன் ராமச்சந்திரனுக்குச் சொந்தமானது என்பதால், அவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், சொத்துக்காக மகனே தந்தையை லாரி ஏற்றிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராமச்சந்திரனை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com