ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை ஏகனாபுரம் கிராம மக்கள் நெற்றியில் திருமண் அணிந்து நூதனப் போராட்டம் நடத்தினா்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தினசரி இரவு தொடா்ந்து பல்வேறு அறப்போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா். தொடா்ந்து 650-ஆவது நாளாக ஏகானாபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகில் பொதுமக்கள் பலரும் நெற்றியில் திருமண் அணிந்து கண்டனக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் நெல்வாய், நாகப்பட்டு, குணகரம்பாக்கம், பரந்துா், ஏகனாபுரம் உள்பட 13 கிராமங்களின் குடியிருப்புகள், விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பாழாகி விடும் என்றும் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினா் பேசினாா்கள்.
கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களையும், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலையும் புறக்கணித்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். நெற்றியில் திருமண் அணிந்து கொண்டு கோஷங்களை எழுப்பினாா்கள்.