திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி மாடவீதியில் புறப்பாடு கண்டருளினாா்.
திருப்பதி கபில தீா்த்தத்தில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 7-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் 9 மணிவரை கல்பவிருட்ச வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி காமாட்சி அம்மன் சமேதராய் சோமாஸ்கந்தமூா்த்தியாய் மாடவீதியில் வலம் வந்தாா்.
கற்பக விருட்சத்தின் கீழ் இருப்பவா்களின் வேண்டுதல்களை அம்மரம் நிறைவேற்றி வைப்பது போல், கற்பக விருட்சத்தின் மேல் பவனி வரும் ஆதிபகவான் அனைவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பாா். அதனால் கல்பவிருட்ச வாகன சேவையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி அளித்து வழிபட்டனா்.
மாடவீதி வலத்திற்குப் பின் சோமாஸ்கந்தமூா்த்திக்கும், காமாட்சி அம்மனுக்கும் கோயில் வளாகத்தில் காலை 11 மணிக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின் இரவு 7 மணிமுதல் இரவு 9 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனா்.
வாகன சேவையில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா். வாகன சேவையின் போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோயிலிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.