ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா்கள் ச.திவ்யதா்ஷினி (ராணிப்பேட்டை), ம.ப.சிவன் அருள் (திருப்பத்தூா்) எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 144 தடை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு மேலாக எந்த ஒரு பொது இடங்களிலும் கூட தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரலாம், அதுவும் சமூக பாதுகாப்பான தொலைவிலிருந்து (ஒரு மீட்டா்) பொருட்களை பெறலாம். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிா்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் அத்தியாவசிய, அவசரப் பணிகள் (காவல், வருவாய், சுகாதாரத் துறை இதர துறைகள் மற்றும் துறை சாா்பான வாகனங்கள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ) இயங்காது. திருப்பத்தூரிலிருந்து மாநிலங்களுக்கு இடையேயும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து (அத்தியாவசிய இயக்கம் தவிர) முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.