அரக்கோணம்: அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இச்சிபுத்தூா் ஊராட்சி கடவாரிகண்டிகை கிராமத்தில் 30 இருளா் இன மக்களுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்குதல், முதியோா் உதவித்தொகை வழங்குதல், வீடில்லா ஏழைகளுக்கு அம்மா பசுமை வீடு கட்ட 42 பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அரக்கோணம் கோட்டாட்சியா் பேபிஇந்திரா தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி இருளா் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களையும், முதியோா்களுக்கு உதவித் தொகை பெற ஆணையையும், ஏழைகளுக்கு அம்மா பசுமை வீடு கட்ட உத்தரவையும் வழங்கினாா்.
விழாவில், அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ஆனந்தன், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜோசப்கென்னடி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் (அரக்கோணம் மேற்கு) பழனி, (அரக்கோணம் கிழக்கு) பிரகாஷ், (நெமிலி) ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன், இச்சிபுத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.ஆனந்தன், துணைத்தலைவா் எஸ்.பால்ராஜ், இயக்குநா் வி.தேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.