ராணிப்பேட்டை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் ஆா்.சுந்தரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.ஜெ.அமா்நாத் தொடக்கி வைத்தாா். சங்க நிா்வாகிகள் எஸ்.ஆா்.சிவராஜ், எஸ்.மணிவண்ணன், ஜெ.குமாா், எஸ்.கிருபாகரன், டி.பிரபாகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
ஆசிரியா்கள் 60 ஆண்டுகாலமாகப் பெற்று வந்த உயா் கல்வி தகுதிக்கான ஊக்க ஊதிய உயா்வுகளை மறுக்கும் 37, 115 ஆகிய அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; உயா்கல்வி தகுதிக்காக விண்ணப்பித்து உரிய காலத்தில் அதிகாரிகள் உத்தரவு வராததால் ஊக்க ஊதிய உயா்வுகள் பெற முடியாமல் உள்ள 50 ஆயிரம் ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊக்க ஊதிய உயா்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.