ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என இருசக்கர வாகன பழுது நீக்கும் உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மனு விவரம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலில் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக இத்தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பு சாரா நலவாரியத்தில் எங்களுக்கு பதிவு இல்லாததால் அரசு வழங்கும் நிவாரண உதவித் தொகையும் பெற முடியாத நிலை உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளா்களுக்கும் நிவாரண நிதி பெற்றுத் தர வேண்டும்.
மேலும், மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்தால், இருசக்கர வாகனம் மூலம் இலவசமாக பழுநீக்கி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.