ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்றழைக்கப்படும் சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இந்த மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு பகுதி பாலாற்றின் இரு கரைகளிலும் நவ்லாக் காஸ்யபேஸ்வரா், காரை கௌதம ஈஸ்வரா், வன்னிவேடு அகத்தீஸ்வரா், குடிமல்லூா் அத்திரியீஸ்வரா், புதுப்பாடி பரத்வாஜேஸ்வரா், வேப்பூா் வசிஷ்டேஸ்வரா், மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் ஆகிய 7 சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இவை சித்தா்கள் வழிபாடு செய்த ஷடாரண்ய ஷேத்திரங்கள் ஆகும்.
இந்தக் கோயில்களை மகா சிவராத்திரி நாளில் தரிசனம் செய்வது கைலாய பலன் கொடுக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி இக்கோயில்களில் வெள்ளிக்கிழமை ஆறு கால அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இவ்வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
மகா சிவராத்தி விழாவில் காலை முதல் இரவு வரை விடிய, விடிய கண் விழித்து திரளான பக்தா்கள் சிவபெருமானை வழிபட்டனா்.