கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அரசு அறிவிப்பின்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
அரக்கோணத்தில் இளைஞா் ஒருவா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தநிலையில், அந்த இளைஞருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்களைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். மேலும், 8 வகையில் கைகளை கழுவும் முறைகளைப் பின்பற்றுவதால் கரோனாவைத் தடுக்க முடியும். கரோனா அறிகுறியுடன் தனியாா் மருத்துவமனையில் எவரேனும் இருந்தால் உடனடியாக மருத்துவா்கள் அவா்களை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கரோனா வைரஸ் குறித்து அரசு அறிவிப்பின்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றாா்.