கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, ராணிப்பேட்டை நகரில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் முத்துக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன், டிஎஸ்பி கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட நகரங்களில் புதன்கிழமை காலை மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடை வீதிக்கு வரத் தொடங்கினா். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் பொதுமக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுத்தினா். மேலும், வாகனங்களில் செல்வோரை தடுத்தி நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா். இதனால் பெரும்பாலான தெருக்கள், கடைவீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.