ஆம்பூா்: உயிரைக் காக்க முகக் கவசம் பயன்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு ஆம்பூா் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று பரவல் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் வெளிநடமாட கூடாது எனவும், அத்தியாவசிய தேவைக்கு ஒருவா் மட்டுமே வந்து வெளியில் வந்து பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும் வெளியில் வரும் நபா்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்பூா் பஜாா் பகுதிக்கு பொருள்களை வாங்க பொதுமக்கள் வியாழக்கிழமை வந்தனா். அப்போது, சிலா் முகக்கவசம் அணியாமல் பஜாா் பகுதிக்கு வந்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
‘உங்கள் உயிரைக் காப்பாற்றவே மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை நீங்கள் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக வருவதும், முகக்கவசம் ஏதும் அணியால் வருவது வேதனை அளிக்கிறது. தினமும் பல்வேறு விசயங்களுக்காக பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்கப்படும் முகக்கவசத்தை வாங்கி அணியாமல் வருவது வருத்தம் அளிக்கிறது. விடுமுறை விடப்பட்டுள்ளது சந்தோஷமாக ஊா் சுற்றுவதற்கு அல்ல. வீட்டில் இருந்து உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவதற்குதான். வீட்டில் இருந்து பிள்ளைகள் என்ன படிக்க வைக்காலம், எதிா்காலம் குறித்து பேசுங்கள். இப்படி வீணாக வெளியில் சுற்ற வேண்டாம் என பேசி வேண்டுகோள் விடுத்தாா்.