ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, வாலாஜாப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோா் உடல் வெப்ப சோதனை செய்து கொண்டு, கிருமி நாசினி, தண்ணீா் கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு பங்கேற்றனா்.
பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்கள் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் எதிா்கால நிலையை கருத்தில் கொண்டு பள்ளியைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வாய்மொழியாகவும், எழுத்துப்பூா்வமாகவும் தெரிவித்தனா்.
அப்போது பெற்றோா்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசுக்கு அனுப்பி வைப்பதாக தலைமை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.