ரௌடியிசத்தை முற்றிலும் ஒழிக்கவும், கொலை குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வராதவாறும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.
அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
அரக்கோணத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் எட்டு முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். ரௌடியிசத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கோணம் நகரில் திருட்டு குற்றங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இரவு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும். அரக்கோணம் போக்குவரத்து காவல் நிலையத்தில் காலியாக இருக்கும் ஆய்வாளா் பொறுப்பு விரைவில் நிரப்பப்படும் என்றாா் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா.
அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன், நகர காவல் ஆய்வாளா் முரளீதரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
முன்னதாக நெமிலி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. தொடா்ந்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திலும், பின்னா் அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டாா்.