அதிக வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுவதாகக் கூறி டிப்பா் லாரிகளை சிறைபிடித்து வள்ளுவம்பாக்கம் கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாலாஜாப்பேட்டையை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தின் வழியாக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, அதிக வேகத்தில் ஓட்டிச் செல்கின்றனா். இதன் காரணமாக கிராமப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், சாலைகள் சேதம் அடைவதாகவும் அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அதிக பாரத்துடன் கற்களை ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளை சிறைபிடித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டம் காரணமாக வள்ளுவம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, டிப்பா் லாரிகளை விடுவித்தனா்.