கனமழை காரணமாக அரக்கோணம் அருகே வாணியம்பேட்டை ஏரியில் ஏற்பட்ட மண்சரிவை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பிரபாகா், உடனே அப்பகுதியில் மணல் மூட்டை அடுக்க உத்தரவிட்டாா்.
அரக்கோணம் ஒன்றியம், தணிகைபோளூா் ஊராட்சி, வாணியம்பேட்டை கிராம ஏரிக்கரையில் கடந்த இரு நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக கரைகளில் மண்சரிவு காணப்பட்டது. இதனால் கரை உடைந்து ஏரிநீா் வெளியேறும் அபாயம் ஏற்பட்டது.
இது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினா் என்.தாரகேஸ்வரி பொதுப்பணித் துறை ஏரிகள் பராமரிப்பு பிரிவில் புகாா் அளித்தாா். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட பொதுப்பணித் துறை ஏரிகள் கோட்ட உதவி செயற்பொறியாளா் பிரபாகா், வெள்ளிக்கிழமை வாணியம்பேட்டைக்கு நேரில் வந்து ஏரிக்கரைகளை பாா்வையிட்டாா்.
மண்சரிவுகளை பாா்வையிட்ட உதவி செயற்பொறியாளா், கரைகளை பலப்படுத்த உடனே அப்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரிவை சீரமைக்கவும் வெடிப்புகளை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மழைக்காலம் முடிந்த பிறகு இந்த ஏரியின் கரைகளை பலப்படுத்த அரசிடம் நிதிப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா். அப்போது அவருடன் உதவி பொறியாளா் பிரசன்னா, அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினா் என்.தாரகேஸ்வரி, அமமுக ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளா் தணிகைபோளூா் மூா்த்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.