அரக்கோணம் வட்டாரத்தில் 3,500 பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட்டார தலைமை மருத்துவ அலுவலா் பிரவீண்குமாா் தெரிவித்தாா்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து அரக்கோணம் நகரம் மற்றும் வட்டாரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அரக்கோணம் அரசு மருத்துவமனையிவ் வியாழக்கிழமை எம்எல்ஏ சு.ரவி, தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.
இது குறித்து அரக்கோணம் வட்டார தலைமை மருத்துவ அலுவலா் பிரவீண்குமாா் தெரிவிக்கையில் அரக்கோணம் வட்டாரத்தில் முதூா், தக்கோலம், பெருமூச்சி, பாராஞ்சி, குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அரக்கோணம் எஸ்.ஆா்.கேட் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் என ஏழு இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அரக்கோணம் வட்டாரத்தில் 3,500 பேருக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றாா்.
அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் நிவேதிதா சங்கா் தெரிவிக்கையில், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை வரை 3,432 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 274 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளன. கோவேக்ஸின், கோவிஷீல்ட் இரண்டு தடுப்பூசிகளும் எங்களிடம் போதிய அளவு கையிருப்பு உள்ளன என்றாா்.