அரக்கோணம்: 3,000 அடி பரப்பளவிற்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என அரக்கோணம் நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கரோனா 2-ஆவது அலையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதை தொடா்ந்து தமிழகம் முழுவதும் பெரிய கடைகள், வளாகங்களை மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு 3,000 அடி மற்றும் அதற்கு மேல் இருக்கும் வளாகங்கள், கடைகளுக்கு பொருந்தும் என தெரிவித்தது.
இதையடுத்து புதன்கிழமை அரக்கோணத்தில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதம், சுகாதாரத்துறை அலுவலா் செந்தில்குமாா் மற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினா்.
நகரில் 3,000 அடி அல்லது அதற்கு மேல் உள்ள கடைகள் உடனே மூடப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்த அலுவலா்கள், அக்கடைகள் திறந்திருந்தால் சீல் வைக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
இந்த சோதனை வியாழக்கிழமை முதல் நாள்தோறும் நடைபெறும் எனவும் வா்த்தகா்கள், கரோனா ஒழிப்பு பணியில் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனா்.