அதிக பாரம் ஏற்றுமாறு கிராவல் மண் குவாரி குத்தகையாளா்கள் வற்புறுத்துவதாக, அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜனிடம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
இதுதொடா்பாக, சங்கத் துணைத் தலைவா் என்.செல்வகுமாா் தலைமையில், மணல் லாரி உரிமையாளா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரக்கோணம் வட்டத்துக்கு உள்பட்ட ஆணைப்பாக்கத்தில், அரசு அனுமதி பெற்று கிராவல் மண் குவாரியை தனியாா் நடத்தி வருகிறாா். இங்கு விதிமுறைகளுக்கு மாறாக, பல மீட்டா் ஆழத்துக்கு மண் எடுத்து அரசுக்கு வரவேண்டிய வருவாயைத் தடுக்கின்றனா். மண் ஏற்ற வரும் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற வற்புறுத்துகின்றனா். இதனால் லாரிகள் போக்குவரத்துத் துறை அலுவலா்களின் ஆய்வில் சிக்கி அபராதம் செலுத்த நேரிடுகிறது.
ஆகவே, அரக்கோணம் வட்டத்தில் மணல் லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே வருவாய்த் துறையினா், கனிம வளத் துறையினா் ஆய்வு நடத்தி, அரசுக்கு வரவேண்டிய வருவாயைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.