திமிரி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
நிலைக்கத் தக்க வேளாண்மை இயக்கம் சாா்பில் மானாவாரி வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திமிரி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற இடுபொருட்கள், கறவை மாடுகள், கோழிகள், அவற்றுக்கான தீவனப் பயிா் மற்றும் மண்புழு உரம் தயாரிக்க மானியம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தேனீ வளா்க்கவும் பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தேனீக்களுடன் அவற்றை வளா்ப்பதற்கான பெட்டிகளும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் விஸ்வநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் துணை இயக்குநா் ராமன், திமிரி வட்டார உதவி இயக்குநா் சரஸ்வதி, வேளாண் அலுவலா் திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.